சென்னை : சென்னை தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், அறிவுரைகள் வழங்கி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சுழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும். பட்டாசுக்கள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கி உள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 ‘டெசிபல்’ அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது.
பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால் போலீஸ்துறை மற்றும் தீயணைப்பு-மீட்புத்துறை அவசர உதவி எண்-112, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்சு எண்-108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும். கடந்த ஆண்டு விதிமுறைகளை மீறி உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்ததற்கு எதிராக 184 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்ததற்காகவும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்ததற்காகவும் 848 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று சென்னை போலீஸ்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.