மதுரை : உசிலம்பட்டி அருகே, தோட்டத்தில் அமைத்த மின் வேளியில் சிக்கி விவசாயி பலியான சோகம் – குற்றத்தை மறைக்க இறந்தவரின் உடலை கிணற்றில் வீசிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நக்கலபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். விவசாய கூலி தொழிலாளியான இவர், ஆடுகளையும் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று இரவு இவரது ஒரு ஆடு காணாமல் போன சூழலில் ஆட்டை தேடி நக்கலப்பட்டி, குஞ்சாம்பட்டி, பேச்சியம்மன் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில், தேடியுள்ளார். அப்போது, பேச்சியம்மன் கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேளியில் சிக்கி முருகன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சூழலில் குற்றத்தை மறைக்க இறந்த முருகனின் உடலை அருகில் உள்ள 100 அடி கிணற்றில் கருப்பசாமி தனது உதவியாளர்களுடன் வீசியுள்ளார்.
ஆட்டை தேடி சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடிய சூழலில் முருகன் கிணற்றில் பிணமாக மிதந்தது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள், காவல்துறையினர் இணைந்து கிணற்றில் இருந்த உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவம் தொடர்பாக தோட்ட உரிமையாளர் கருப்பசாமி உள்ளிட்ட அவருக்கு உதவியாக இருந்தவர்கள் என மூன்று பேரை கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















