மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த (21.06.2024)ம் தேதி மதுரை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை ஆன்லைன் வர்த்தகம் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் ரூ.96,57,953/-ஐ பல்வேறு வங்கிகணக்குகள் மூலமாக பெற்றுக்கொண்டு ஆன்லைன் பணமோசடி செய்த நபர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாதி குற்றவாளிகளுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.38,28,000/- முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு இதுவரை சுமார் ரூபாய் பன்னிரெண்டு இலட்சம் முடக்கப்பட்ட பணத்திலிருந்து நீதிமன்றம் மூலமாக திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக வாதி குற்றவாளிகளுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை பின்தொடர்ந்து புலன் விசாரணை செய்த போது, அதில் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தி வாதியிடமிருந்து சைபர் குற்றவாளிகள் ரூ.20,00,000/ ஐ ஆன்லைன் பணமோசடி செய்து பெற்று, அந்த பணத்தை திருச்சி ஆழ்வார் தெருவைச் சேர்ந்த சேக்தாவூத் மகன் சீனி முகமது என்ற நபரின் இரு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதை சீனிமுகமது பணமாக திரும்ப பெற்று வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்ததை விசாரணையில் கண்டுபிடித்த தனிப்படையினர், மேற்கண்ட சீனிமுகமது வங்கி கணக்குகளை முடக்கம் செய்ததோடு, திருச்சி சென்று அவரை கைது செய்து விசாரணை செய்ததில், மேற்கண்ட வங்கி கணக்குகளை திருச்சி உறையூரை சேர்ந்த லியாகத் அலி மகன் இப்ராகிம் என்பவரது ஆலோசனையின் பேரில் கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு திருச்சி தரைத்தின நகரை சேர்ந்த அப்துல் நசீர் மகன்கள் முகமது சபீர், முகமது ரியாஸ், திருச்சி உறையூரைச் சேர்ந்த லியாகத் அலி மகன் முகமது அசாருதீன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரப்பள்ளியை சேர்ந்த முகமது தாஜீதீன் மகன் முகமது மர்ஜுக் ஆகியோருடன் சேர்ந்து மேற்கண்ட குற்றத்தை செய்தது தெரியவந்தது. இதற்காக மேற்படி குற்றவாளிகள் ஒரு லட்சம் ரூபாய்க்கு, ஆயிரம் ரூபாய் கமிஷனாக இதுவரை லட்சக்கணக்கில் பணம் பெற்றள்ளதும் தெரியவந்தது.
மேற்படி குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் திருச்சி மற்றும் தஞ்சாவூர் சென்றுகைது செய்து அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட குற்றவாளிகள் பல வங்கி கணக்குகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி பண மோசடி செய்துள்ளது. விசாரணையில் தெரிய வருகிறது. மேலும், இவர்கள் மேற்குவங்காளம், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இக்குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியதோடு மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய அறிவுறுத்தியுள்ளார்கள்.
மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்















