சென்னை : சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் அவர்களிடம் காதில் சொருகும் ‘புளூ டூத் ஹெட்போன்’ இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதனை பிரித்து பார்த்தபோது, அதற்குள் 66 தங்க தகடுகள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து 3 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 845 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், மடிக்கணினிகள் உள்பட மின்சாதன பொருட்களையும் கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.