தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் திருமதி. ராமலட்சுமி மற்றும் போலீசார் (17.05.2026) குளத்தூர் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்குள்ள ஒரு அரிசிக்கடை முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர்களான வீரசின்னரசு (38). மாரிமுத்து (46). ஆகியோர் என்பதும் அவர்கள் அந்த அரிசிக்கடை உரிமையாளரான குளத்தூரைச் சேர்ந்த பிச்சைமணி (61). என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அரிசிக்கடையை சோதனை செய்ததில் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான பிச்சைமணி, வீரசின்னரசு மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 30 கிலோ 475 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 10,000/- ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















