திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் உள்ள மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிங்க் உதவி காவல் நிலையம் அருகே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டி குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் நடைபெற்றது. அன்னை வசந்தம் கல்வியியல் அறக்கட்டளை மற்றும் பொன்னேரி காவல்துறையினருடன் இணைந்து பிரச்சாரம் நடைபெற்றது. அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளையின் நிர்வாகிகள் தலைவர் ஆனந்தி, பொதுச்செயலாளர் வசந்தகுமார், பொருளாளர் கெஜலட்சுமி உள்ளிட்டோர் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரச்சாரத்தில்திருவள்ளூர்மாவட்ட ஆட்சியரகத்தின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக குழந்தைகள் நல அலுவலர் ராம்கி கலந்துகொண்டு போக்சோ சட்டம் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும் அப்பகுதி உள்ள வியாபாரிகளுக்கும் மாணவர்களுக்கும் வழங்கினார்.
குழந்தைகளின் பாதுகாப்பிற்கும்,குழந்தை திருமணத்தை தடுப்பதற்கும்,நல்ல தீய தொடுகைகள் குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் குற்றங்களின் போது பயன்படுத்தப்படும் 1098 என்ற அவசர அழைப்பு எண் குறித்தும் அளிக்கப்பட்ட விழிப்புணர்வை அப்பகுதி மக்கள் வரவேற்றனர். அன்னை வசந்தம் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அப்பகுதி பொது மக்களும் இதில் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















