திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருஞ்சேரி பகுதியில் சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அதிமுக,திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. பொதுவாக இந்த இடத்தில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டங்களில் கலந்து கொள்ள வரும் முதலமைச்சர் முதல் கட்சித் தலைவர்கள் வரை வந்து செல்வதால் இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பொன்னேரி தச்சூர் கூட்டுச்சாலை அருகே சாலை ஓரத்தில் உள்ள 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வயதான மரங்களை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர்.
இவ்வழியாக செல்லும் பாதசாரிகள் மரத்தின் அடியில் ஓய்வு எடுப்பதும் வாகன ஓட்டிகள் நிழலில் நின்று இளைப்பாறுவதும் வாடிக்கையாக இருந்தது.
அப்படிப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட மரங்களை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து பயன்பெற்று வருவதால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பெறும் வகையில் வழிவகை செய்யுமாறு பொன்னேரி சாராட்சியர் அப்துல் ராஷித்திடம் பொன்னேரி கிரிமினல் பார் அட்வகேட் அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா தலைமையிலான வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர். இதில் வழக்கறிஞர்கள் கார்த்திக்,வெற்றி, மகேஷ்,டில்லி பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















