செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் கண்ணன் (வயது 40). தி.மு.க.வை சேர்ந்தவர். மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் அடுத்த சித்தாலமங்கலம் பகுதியை சேர்ந்தவர். ராஜசேகர் (45). இவர் புரட்சி பாரதம் கட்சி செங்கல்பட்டு மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் மதுராந்தகம் கிளியாற்று பாலம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் சேலத்தில் நடைபெற இருந்த தி.மு.க., மாநில இளைஞர் அணி மாநாட்டுக்கான பேனர் வைக்கப்பட்டிருந்தது. மழையின் காரணமாக மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ராஜசேகர் விழுப்புரத்தில் நடைபெற்ற புரட்சி பாரதம் கட்சியின் மனிதம் காப்போம் மாநாட்டுக்கான பேனரை, தி.மு.க., பேனர் அருகில் ஒட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் கண்ணன், 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன், ராஜசேகர் வீட்டுக்கு சென்று, இது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது ராஜசே கரை, கண்ணன் மற்றும் அவருடன் வந்த நபர்கள் கத்தியால் வெட்டினர். இதில் ராஜசேகர் படுகாயம் அடைந்து. ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், ராஜசேகரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார்’ வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்