நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பேணும் நோக்கிலும், சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சேந்தமங்கலம், காயல்பட்டி மற்றும் குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 22 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.32,500/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது நாமக்கல் மாவட்ட காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும். பொதுமக்களும் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




















