திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஒதப்பை கொசஸ்தலை ஆற்றுப் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.
வட கிழக்கு பருவ மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் 20– நாட்களுக்கும் மேலாக உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 18 ஆயிரம் கன அடியாக உயர்த்தி திறந்ததால் ஒதப்பை பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப் பாலம் நீரில் மூழ்கும் நிலை உருவானது .
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டைஅல்லது ஊத்துக்கோட்டையிலிருந்து திருவள்ளூருக்கோ செல்ல வேண்டியவர்கள் கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று பூண்டிநீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் திறப்பு13 ஆயிரம் கன அடியாக குறைத்து திறந்ததால் ஆற்றுப்பாலத்தில் நீர் செல்வது குறைந்து காணப்படுகிறது.
இதனால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மீண்டும் வாகனங்கள் செல்லஅனுமதிக்கப்பட்டதால் போக்குவரத்து தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்