திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள சி.எம்.எஸ் ஹோமில் சேர்ம துரை என்ற மாணவன் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் விடுதி வளாகத்தில் உள்ள கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்ததால் சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், பணகுடி காவல் நிலையத்தில் விடுதி காப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., நேரடியாக சென்று பார்வையிட்டார். இவ்வழக்கில் இதுவரை சாட்சிகளை விசாரணை செய்ததிலிருந்தும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்த மருத்துவரின் முதற்கட்ட கருத்து படியும், வழக்கின் முதல் கட்ட விசாரணையில், சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல்துறையினர் சார்பாக மாணவனின் பெற்றோரிடமோ அல்லது விடுதி நிர்வாகத்திடமோ பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. சட்டத்திற்குட்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை திசை திருப்பும் விதமாக இது போன்ற உண்மைக்கு புறமான அவதூறு தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்