தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட குட்கா,லாட்டரி சீட்டுகள்,மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றின் விற்பனையை தடுக்கும் விதமாக தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலையில் சார்பு ஆய்வாளர் திரு.பரத்லிங்கம் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர்களை சோதனை செய்ததில் அவர்கள் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து சார்பு ஆய்வாளர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. ராஜாராம் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட புளியங்குடியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரின் மகன் சிவசுப்பிரமணியன் 19, முத்துசாமி என்பவரின் மகன் மணிகண்டன் ரவி 23, சிதம்பரா புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் கபில் குமார் 20, சங்கரன்கோவிலை சேர்ந்த சலீம் என்பவரின் மகன் முகமது அலி 22, சண்முகராஜ் என்பவரின் மகன் காளிராஜ் 19,மற்றும் பாதுஷா என்பவரின் மகன் ஷெரீஃப் 20. ஆகிய ஆறு நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1.6 kg கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது..