மதுரை: மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘FQL Trading Wallet’ என்ற ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் (USDT) முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், தினசரி அதிக லாபம் ஈட்டலாம் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. நிதி மோசடி தொடர்பாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுவரை நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய 12குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களது பாஸ்போர்ட் முடக்குவதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நிதி மோசடியில் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்த பொதுமக்களுக்கு, அவர்கள் இழந்த பணத்தை மீட்டு தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகார் அளிக்கும் வசதி
இச்செயலியின் மூலம் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புகார் அளிப்பதற்காக மதுரைக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ நேரடியாக புகார் அளிக்கலாம். மேலும், மத்திய அரசின் இணையதளமான www.cybercrime.gov.in மூலமாகவோ அல்லது 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்புகொண்டோ உடனடியாக புகாரை பதிவு செய்யலாம்.
பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல் அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் முதலீட்டு தளங்கள் மற்றும் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பு, அதிக லாபம் பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தைகள் கூறும் நபர்களை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என மதுரை மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















