திருச்சி: திருச்சி மாநகரில் கடந்த 07.09.20-ந்தேதி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது வீட்டின் அருகாமையில் விளையாட சென்ற தனது மகளை ஆசை வார்த்தை கூறி வன்புணர்வு செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் ஜான் மேக்சிம் த.பெ. பாஸ்டின் என்பவர் மீது கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் குற்றவாளி ஜான் மேக்சிம்-ஐ கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, மேற்படி குற்றவாளி ஜான் மேக்சிம் மீது கடந்த 11.03.2020-ந்தேதி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி திரு.ஸ்ரீவட்சன் அவர்கள் நீதிமன்ற விசாரணையை முடித்து, 18.03.2024-ம்தேதி, மேற்படி குற்றவாளி ஜான் மேக்சிம் என்பவருக்கு 20 வருட சிறைத்தண்டனையும், அபராதம் ரூ.10,000/- ம் வழங்கியும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5,00,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.ஜாகீர் உசேன் அவர்கள் ஆஜராகி அரசு சார்பாக வழக்கு நடத்தி வாதாடினார்கள்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அப்போதைய ஆய்வாளர் திருமதி.ஆனந்தவேதவள்ளி அவர்களையும், புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர் படுத்திய தற்போதைய கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி.செல்வமலர் அவர்களையும்; மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.



















