மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட சைபர்கிரைம் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் பேரிலும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட குற்றச்சம்பவங்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர புலன்விசாரணையில் ஈடுபட்டு கடந்த (04.02.2026)-ம் தேதி மனுதாரர் ஒருவருக்கு அவருடைய செல்போன் எண்ணிற்கு பெங்களூரில் போலீஸ் ஸ்டேசனிலிருந்து போலீஸ் பேசுவதாக கூறி மனுதாரின் பெயர் மற்றும் முகவரியை கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் மனுதாரின் பெயரில் போலியாக வங்கி கணக்கு தொடங்கி பல கோடி அளவில் பணபரிவர்த்தனை நடைபெற்று இருப்பதாக மிரட்டி மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் மனுதாரரை Digital Arrest செய்திருப்பதாகவும் மனுதாரின் வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் எனக் கூறி அவருடைய வங்கி கணக்கில் உள்ள இருப்பு பணம் ரூ.78,75,303/-ஐ உடனே அனுப்ப வேண்டும் என கூறியதால், பயந்து போன வாதி அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு வங்கி கணக்கு மூலமாக அனுப்பி வைத்ததாகவும் அவர்கள் மேலும் பணம் செலுத்தும் படி கூறவே மனுதாரர் சந்தேகமடைந்து தன்னை பணமோசடி வழக்கில் Digital Arrest செய்துள்ளதாக கூறி ரூ.78,75,303/-ஐ ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு புகார் அளித்த வழக்கில் சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை செய்தனர் .
ஆன்லைன் பணமோசடி மூலம் சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பெறும் பணத்தை தனது சேமிப்பு வங்கி கணக்கை கொடுத்து பணபரிமாற்றம் செய்து பெற்று அதை Cash withdrawal செய்து சைபர் குற்றவாளிகளுக்கு கொடுத்து உதவி அதற்கு கமிஷன் பணம் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த நேதாஜி என்பவரது மனைவி மகேஸ்வரியை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி ஆன்லைன் பணமோசடி செய்து பெறும் பணத்தை வங்கி கணக்குகள் மூலமாக பரிமாற்றம் செய்து பெறுவதற்காக தயார் நிலையில் வைத்திருந்த 24 வங்கி கணக்கு புத்தகங்கள் 20 ATM கார்டுகள், சிம்கார்டுகள் 2 மற்றும் மொபைல்போன் – 1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கமிஷன் பணத்திற்காக சிம்கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவற்றை தரும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















