திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் சிமென்ட் ஆலையில் சீனியர் மேலாளர் திருநாவுக்கரசு (55). வீட்டில் கடந்த பிப்.-21ம் தேதி இரவில் புகுந்த மர்ம நபர்கள், 170 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்தனர். குஜிலியம்பாறை போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் மத்தியப் பிரதேசம் சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன் பகோலியை சேர்ந்த பாயா மெர்சிங் பாப்பிரியா (30) என்பவரை பிடித்து குஜிலியம்பாறை அழைத்து வந்து விசாரித்தனர், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர் அளித்த தகவலின்பேரில் மத்தியப் பிரதேசத்திற்கு மீண்டும் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மான் சிங், ராஜூ பலேசியா, மல்லு மோன்யா ஆகியோர் சிக்கினர். அங்கிருந்து 3 பேரையும் குஜிலியம்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.





















