திண்டுக்கல்: பழனி அருகே வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், டிஎஸ்பி தேவராஜ் தலைமையில், காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி, உதவி ஆய்வாளர் ஆனந்த் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக கூறப்படும் பெண்ணை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், அங்கு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















