மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் மோட்டார் பைக்குகள் திருடிய மூன்று பேரை திருமங்கலம் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, 5 மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.
திருமங்கலம் பகுதியில் கடந்த சில வாரங்களாக மோட்டார் பைக்குகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மோட்டார் பைக்குகள் திருடப்பட்ட தாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதை அடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் IPS, உத்தரவின் பேரில், திருமங்கலம் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் திரு.பாண்டியரசன், திரு.சரவணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தனக்கன்குளத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, அலெக்சாண்டர் மற்றும் சாக்கிலிபட்டியைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரிடம் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன் விசாரணை செய்தபோது, அவர்கள் மோட்டார் பைக்குகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். வாகனங்கள் திருட்டு போன சில நாட்களில் விரைவான விசாரணை மேற்கொண்ட திருமங்கலம் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்