புதுக்கோட்டை : பொன்னமராவதி அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, பெற்ற தாயே இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கருப்பர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பொன்னடைக்கன், (30), பொள்ளாச்சியில் தேங்காய் உரிக்கும் கூலி வேலை பார்க்கிறார். அவரது மனைவி பஞ்சவர்ணம், (24), மூன்றாண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, ஜெகதீசன், 2, என்ற ஆண் குழந்தையும், தர்ஷியா என்ற-, 8 மாத பெண் குழந்தையும், இருந்தன.கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன், அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால், விரக்தி அடைந்த பஞ்சவர்ணம், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, இரண்டு குழந்தைகளையும், கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, தாய்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். பதறிய பஞ்சவர்ணத்தின் தாய் சின்னப்பிள்ளை மற்றும் அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று பார்த்த போது, குழந்தைகள் இருவரும் சடலமாக கிடந்தனர். அருகில் தாய் பஞ்சவர்ணம் அழுதபடி இருந்தார். தகவலறிந்த பொன்னமராவதி காவல் துறையினர் , குழந்தைகளின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு, அனுப்பினர். பஞ்சவர்ணத்தை கைது செய்து விசாரிக்கின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக, பெற்ற தாயே, இரண்டு குழந்தைகளை கொன்றது, அந்த பகுதியில் பெரும் சோகத்தை, ஏற்படுத்தியுள்ளது.