சென்னை : சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு. ரோகித்குமார், தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் ரூ.17 லட்சம் இருந்தது.
மேலும், தனது உடலிலும் ரூ.20 லட்சத்தை கட்டி மறைத்து வைத்து இருந்தார். அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.37 லட்சத்தை காவல்துறையினர், பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஆனந்த்ராவ் ஷின்டே (30), என்பது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.37 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.