ஹரியானா மாநிலத்தின், பதேஹாபாத் பகுதியைச் சேர்ந்த (32), வயது பெண் ஒருவர் தனது 9 வயது மகனுடன் ரயிலில் பயணித்துள்ளார். இந்த ரயில் ரோதக் பகுதியில் இருந்து தோஹானா என்ற பகுதிக்கு சென்றுள்ளது. இந்த பெண் பயணி கடைசி ஸ்டேஷனான தோஹானாவில் இறங்க வேண்டிய நிலையில், அப்போது, சன்தீப் என்ற நபர் அந்த பெண் இருந்த பெட்டியில் மதுபோதையுடன் ஏறியுள்ளார். அந்த பெண் தனது 9 வயது மகனுடன் தனியாக இருந்ததை பார்த்ததும், போதையில் இருந்த நபர் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார் சந்தீப். சிறிது தூரத்தில் சந்தீப்பும் கீழே குதித்துள்ளார்.
மனைவிக்காக கணவர் காத்திருந்த நிலையில், 9 வயது மகன் மட்டும் தனியே அழுது கொண்டே இறங்குவதை பார்த்து தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் மகனிடம் விசாரித்ததில் உண்மையை தெரிந்து கொண்டு அதிர்ச்சியடைந்த கணவர் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறை அப்பகுதியின் ரயில் தண்டவாளங்களில், தேடியதில் மனைவி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சற்று தொலைவில் சந்தீப் காயங்களுடன் கிடந்த நிலையில், அவரை காவல்துறை கைது செய்துள்ளது.