சென்னை : சென்ட்ரல் அருகே உள்ள பெரியமேடில், உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது உஸ்மான்(50), என்பவர் சிக்கன் பிரியாணி கடையில் கடந்த ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மாலை இவரது கடைக்கு பிரியாணி வாங்குவதற்காக ஒரு நபர் வந்துள்ளார். பிரியாணி வாங்கிவிட்டு தன்னிடம் ரூபாய் 90 மட்டுமே இருப்பதாகவும் இந்த பணத்தை வைத்துக் கொண்டு பிரியாணியை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் கடை ஊழியரான முகம்மது உஸ்மான் பிரியாணியின் விலை ரூபாய் 100 எனவும் 90 ரூபாய்க்கு தர இயலாது எனவும் கூறியுள்ளார். இதனால் பிரியாணி வாங்க வந்த நபர் கடை ஊழியர் முகமது உஸ்மானிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். ரூபாய் 90 க்கு பிரியாணி தர முடியாது என கடை ஊழியர் முகமது உஸ்மான் கறாராக தெரிவிக்க, பிரியாணி வாங்க வந்த நபர் இதனால் ஆத்திரம் அடைந்துள்ளார்.
மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கடை ஊழியரான முகமது உஸ்மானின் மூக்கை வெட்டியுள்ளார். தொடர்ந்து முகமது உஸ்மானின் வயிறு, கை உள்ளிட்ட பகுதிகளிலும் வெட்டி விட்டு தனக்கு பிரியாணி கொடுத்தே ஆக வேண்டும் என அங்குள்ளவர்களை மிரட்டி பிரச்சனையில், ஈடுபட்டு உள்ளார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் பெரியமேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியமேடு காவல்துறையினர் ஊழியரை தாக்கிய அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் பெரியமேடு பகுதிகளில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.