மதுரை : மதுரையில் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர், விடுதியில் தங்கியுள்ள சக பெண்களை ஆபாசமாக புகைப்படமெடுத்து மருத்துவர் ஒருவருக்கு பகிர்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ஆசிக் என்ற மருத்துவர், கமுதியில் தனியாக க்ளினிக் நடத்தி வருகிறார். இவரது க்ளினிக் அருகேயுள்ள பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அண்ணாநகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி மதுரையில் உள்ள பி.எட். படித்து வருகிறார். இவருக்கும் மருத்துவர் ஆசிக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கல்லூரி மாணவி, அவர் தங்கியிருந்த விடுதியில் உள்ள பெண்கள் குளிக்கும் போதும் தூங்கும் போதும் அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக புகைப்படமெடுத்து மருத்துவர் ஆசிக்கிற்கு அனுப்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை விடுதியில் இருந்த பெண் ஒருவர் பார்த்து விட்டு விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர் கல்லூரி மாணவியின் செல்போனை ஆய்வு செய்து, போலீசில் புகார் அளித்தார். காவல் ஆணையர் திரு.செந்தில்குமார், உத்தரவின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சைபர் கிரைம் போலீசார், கல்லூரி மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பல பெண்களை ஆபாசமாக புகைப்படமெடுத்து, அதனை மருத்துவருக்கும் அனுப்பியதும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவர் ஆசிக் மற்றும் கல்லூரி மாணவியை கைது செய்த போலீசார், வீடியோவை விற்பனை செய்தார்களா என விசாரித்து வருகின்றனர்.