சிவகங்கை: காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரிகளின் முப்பெரும் விழாவான, 19 வது ஆண்டு விழா, விருது வழங்கும் விழா மற்றும் கலை விழாவானது அமராவதிபுதூர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.ரா.சிவகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றி கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். இவ்விழாவிற்கு ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் கல்வி ஆலோசகர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் S.சுப்பையா அவர்கள் முப்பெரும் விழாவிற்கு தலைமையுரையாற்றும் பொழுது, இனிமையான நாட்கள் என்றால் அது கல்லூரியில் பயிலும் நாட்கள் தான். கல்லூரிக் காலங்களில் ஏற்படக்கூடிய கசப்பான அனுபவங்களை விடுத்து இனிமையான அனுபவங்களை மனதில் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுக்கு புன்னகை அவசியம் என்றும் ஆசிரியர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பது ஆசிரியர்கள் தான். மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் அயராது பாடுபட வேண்டும். தேசப்பற்றையும், நாட்டுப்பற்றையும் வளர்க்கும் விதமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒருபோதும் பிரச்சனைகளைக் கண்டு அச்சப்படக்கூடாது. மாணவர்களுக்கு சிறந்த ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் திகழ வேண்டும். ஆசிரியர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். வாசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நகைச்சுவை அனுபவங்களை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் தொழில்நுட்பங்கள் மூலமாக கற்றுக் கொடுப்பது மட்டுமின்றி அனைவரும் சமுதாயத்தோடு ஒத்துப்போக கற்றுக்கொள்ள வேண்டும்.
கோபத்தை யார் யாரெல்லாம் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் மகத்தான மனிதர்களாக பிற்காலத்தில் உருவாகுவார்கள் என்றும் கல்லூரியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா, கவிதை, கட்டுரை, பாட்டுப்போட்டி என்று நடத்துவதன் மூலமாக எதிர்கால ஆசிரியர்களாக உருவாகும் மாணவர்கள் இவைகளையெல்லாம் பார்வையிடும் பொது நல்ல அனுபவங்களைப் பெரும் போதுதான் பிற்காலத்தில் பள்ளிகளில் தனது மாணவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்று கூறினார். மேலும் ஆசிரியர்கள் மன வலிமையுடனும், சமூகத்தில் ஒத்துப் போக கூடிய அளவிற்கு மனவளர்ச்சி முதிர்ச்சி அடைந்தவர்களாகத் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.
மேலூர் நீதிமன்ற சார்பு நீதிபதி திருமதி M.சாமுண்டீஸ்வரி பிரபா அவர்கள் 19வது ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டு, மாணவர்களுக்கு விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கி உரையாற்றுகையில், ஆசிரியர் பணி என்பது அறிஞர் பெருமக்களை, ஆசிரியர்களை, நீதிபதிகளை, பொறியாளர்களை, என்று அனைத்தையும் உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் பல்வேறு தடைகளைக் கடந்து முயற்சிக்க வேண்டும். தான் கூட விடாமுயற்சியுடன் கடின உழைப்பின் காரணமாகத்தான் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் வென்று தற்பொழுது சார்பு நீதிபதியாக உயர்ந்து இருக்கிறேன்.
விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும். தோல்விகளைக் கண்டு பயந்து விடக்கூடாது, துவண்டு விடவும் கூடாது, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், வேட்கை ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இருக்க வேண்டும். யாருக்குச் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதோ அவர்களால் தான் சாதிக்க முடியும், சாதனையாளர்களாக உருவாக முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் சமுதாயத்தில் உயர்ந்த சிந்தனை உள்ளவர்களாகத் திகழ வேண்டும். ஆசிரியர் பணி செம்மையாக இருக்குமானால் நம் சமூகம் செம்மையாக இருக்கும். நல்ல விஷயங்களை மாணவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். தோழமை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். குற்ற செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது, இன்றைய சூழ்நிலையில் நீதிபதியாக நீதிமன்றங்களில் நாங்கள் பல்வேறு வழக்குகளைச் சந்திக்கிறோம்.
அதில் மிக மிக முக்கியமான வழக்குகள் குடும்பப் பிரச்சினைகள் சார்ந்த வழக்குகள் தான் அதிகம். குடும்பத்தில் விட்டுக் கொடுக்கக்கூடிய சகிப்புத்தன்மை இல்லாததால் நிறைய குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு அந்தக் குடும்பம் சிதைந்து போகிறது என்றும் நீதி மன்றங்களில் வழக்குகளினால் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். விருது வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ன் நிறுவனர் சாதனையாளர் S வெங்கடேசன் மற்றும் கலைவாணி அவர்கள் வாழ்த்துரை வழங்கி, ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரிகளின் உலக சாதனையைப் பாராட்டி கல்லூரிக்கு ICON விருதும், ஸ்ரீ ராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் R.சிவகுமார் மற்றும் ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் K.அங்கயற்கண்ணி, ஆகியோர்களது கல்விச் சேவைகள் மற்றும் உலகசாதனை நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் திறன்களைப் பாராட்டி குரு துரோணாச்சாரியார் விருது வழங்கி பாராட்டியதுடன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் உலக சாதனைக்கான விருதை வழங்கினார்கள்.
மேலும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் சி அய்யாவு அவர்கள் கலந்து கொண்டு கலை விழாவை துவக்கி வைத்தார். மேலும் கலை விழாவின் சிறப்பு விருந்தினர் விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 8 ன் வெற்றியாளர் ஸ்ரீதர் சேனா அவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு மாணவர்களை மகிழ்வித்தார். முப்பெரும் விழாவில் உலக சாதனை விருதுகள், கலைப்பொடிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி கொடுத்த பேராசிரியர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
முப்பெரும் விழாவில் ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் K அங்கயற்கண்ணி அவர்கள் முன்னிலைவகிக்க பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை முனைவர் KR பாலசுந்தரி, பயிற்சி ஆசிரியர்கள் M.ராமவள்ளி மற்றும் G. நரேந்திரன் தொகுத்து வழங்கினார்கள். இறுதியாக ஸ்ரீ ராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர் திருமதி.SP.வித்யா நன்றி கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















