புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், பகுதியைச் சேர்ந்த விவசாயி பார்த்திபன், (34), அதே பகுதியைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்த, (30), வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் கணவனுக்கு பிறந்த, (17), வயதான சிறுமியை, பார்த்திபனும், சிறுமியின் பெரியப்பா மகனான வெங்கடேசன், (25), என்பவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி, 7 மாத கர்ப்பமாக இருந்த போது, அவரது தாய்க்கு இது தெரிய வந்தது. சிறுமியிடம் விசாரித்த போது, பார்த்திபனும், வெங்கடேசனும் பாலியல் வன்கொடுமை, செய்தது தெரிந்தது.
இது தொடர்பாக, சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் துறையினர், விசாரித்தனர். சிறுமியிடம் டி.என்.ஏ., பரிசோதனை செய்த போது, கர்ப்பத்துக்கு காரணம் வெங்கடேசன் எனத் தெரிய வந்தது. இதையடுத்து பார்த்திபன், வெங்கடேசன் ஆகியோரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, நேற்று தீர்ப்பு வழங்கினார் .பார்த்திபன், வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும், தலா, 70 ஆயிரம் ரூபாய், அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, அரசு தரப்பில், நான்கு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். என்றும் உத்தரவிட்டார்.