செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சிக்குட்பட்ட, அன்னை சத்யா நகர் அருகே, தனியாருக்கு சொந்தமான மனை பிரிவுகள் உள்ளன. இந்த மனை பிரிவுகளில், பள்ளிக்கரணையைச் சேர்ந்த, வினோத், (38), என்பவருக்கு சொந்தமான மனையும் உள்ளது. மொத்தம், 143 மனை பிரிவுகளை கொண்ட, இந்த இடத்தில், வினோத்குமாரின் நண்பர் ஆறுமுகம், என்பவருக்கு சொந்தமான, மனை உட்பட 55, மனைகளை சுற்றி இருந்த எல்லை கற்களை அகற்றி, தி.மு.க.,வை சேர்ந்த, அகரம் தென் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரன், அத்துமீறி வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு, அவரின் நண்பர்கள் இருவரும், உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து, வினோத்குமார், தாம்பரம் காவல் ஆணையர், அலுவலகத்தில், சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார்.அந்த புகார், சேலையூர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டு, ஜெகதீஸ்வரன் உட்பட மூவர் மீதும், மோசடி, கொலை மிரட்டல் உட்பட, நான்கு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி, ஜெகதீஸ்வரன் கூறுகையில்,” இங்குள்ள, 4 ஏக்கர் 17 சென்ட் நிலம் குறித்து, எனக்கும், மற்றொரு தரப்பிற்கும், தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இச்சூழலில், என் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து, என்னிடம் விசாரிக்காமலேயே, காவல் துறையினர், வழக்கு பதிந்துள்ளனர்,” என்றார்.