தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே, ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர். காரிமங்கலம் போலீசார் நேற்று, பல்வேறு பிரிவுகளாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
காரிமங்கலம், வெள்ளிச்சந்தை ரோட்டில் சந்தேகப்படும் படி வந்த பிக் அப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. போலீசார், வாகனத்தில் இருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஆத்தூரை சேர்ந்த செந்தில், 42, யுவராஜ், 36 என்பதும், கர்நாடகாவிலிருந்து ஆத்தூருக்கு குட்காவை கடத்திச் சென்றதும் தெரிந்தது. போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து, ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள பிக்அப் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.