புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், அருகே உள்ள குடுமியான்மலையை அடுத்த சீகம்பட்டி பகுதிகளில், சிலர் குளத்துகரை மற்றும் குளத்துமடை ஓரங்களில் சாராய ஊறல் போட்டுள்ளதாக புதுக்கோட்டை நகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகாவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட சிறப்புபடை காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன், தலைமையிலான காவல்துறையினர் , சீகம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அன்னவாசல் அருகே உள்ள சீகம்பட்டி குளத்து கரையில் மடைபகுதி அருகிலும் அதன் கரையிலும் 7 பிளாஸ்டிக் பேரல்களில் 250 லிட்டர் கள்ளச்சாரய ஊறல் மற்றும் 8 லிட்டர் எரி சாராயம் ஆகியவை இருப்பதை கண்டு பிடித்தனர்.
பின்னர் கள்ளச்சாரம் ஊறல் போட்ட சீகம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (26), பெருமாள் (23), சரத்குமார் (20), உப்புபாறையை சேர்ந்த கண்ணகி (38), மகேஷ்வரி (34), ஆகிய 5 பேரை காவல்துறையினர், கைது செய்தனர். அங்கிருந்து பறிமுதல் செய்த 250 லிட்டர் கள்ளச்சாரயம் 8 லிட்டர் எரி சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு புதுக்கோட்டை நகர மது விலக்கு அமலாக்கத்துறையில், ஒப்படைக்கப்பட்டது.