சென்னை : சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று சென்னை ,கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகாரிகளுடன் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், சென்னையில் அதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சென்னைவாசிகள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. நேற்று முன் தினம் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதால் நோய் தொற்று பரவ அதிகம் வாய்ப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கிருந்த வியாபாரிகளிடம் நோயின் தீவிரம் குறித்தும்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறினார்.