அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் ராயபுரம் பகுதியில் வசித்துவரும் இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ய பெற்ற நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் செந்துறை மற்றும் ராயபுரம் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டு அப்பகுதிகள் முழுமையும் தனிமைப்படுத்தப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் வாழும் மக்கள் வெளியே வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் , அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதிகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து ஊருக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல அவசர காரணங்கள் இன்றி யாரையும் அனுமதிப்பதில்லை .ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் உள்ளதா என காவல்துறையினரால் ஆய்வு செய்யப்படுகின்றது. இந்நிலையில் 22/4/2020 அன்று அரியலூர் மாவட்ட ஆட்சியாளர் திருமதி.த.ரத்னா , இஆ.ப., அவர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரில் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் கோட்டாட்சியர் பாலாஜி. வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், சந்திரசேகரன் மற்றும் பல அதிகாரிகள் இருந்தனர்.
144 தடை உத்தரவை மதித்து மக்கள் அனைவரும் வீட்டிலிருந்து அரசுக்கும் காவல்துறையினருக்கும் ஒத்துழைக்குமாறும், உங்கள் விழிப்புணர்வு ஒன்றுதான் இந்த நோயை ஒழிக்கும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறினார்.