சென்னை : பொதுவாக பொங்கல் தினத்தன்று குடும்பத்துடன் புத்தாடை அணிந்து, புத்தரிசியில், பொங்கலிட்டு குடும்பத்துடன் நேரம் செலவிட அனைவரும் விரும்புவோம். ஆனால் நம் காவலர்கள் அன்றும் பாதுகாப்பு என்ற பெயரில் காவல் பணியில் ஈடுபட்டனர். எனவே சிறிது நேரம் கிடைத்தாலும், காவலர்கள் தன் குடும்பத்துடன் தான் நேரம் செலவிடுவார்கள் என்று தான் நாம் எண்ணுவோம்.
ஆனால் நம் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட ராயபுரம் பகுதி போக்குவரத்து போலீஸார் முதியவர்களுடன், பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். காவல்துறை என்பதே சிரமமான பணி அதிலும் போக்குவரத்து காவல் பணியில் உள்ள சிரமங்களை நாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏனெனில் நாம் தினமும் கண்கூடாக கண்டு கடந்து செல்கிறோம்.
கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், நனைக்கும் பனியிலும், நடுங்கும் குளிரிலும் பணிசெய்து நம்மை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பவர்கள் நம் போக்குவரத்து காவலர்கள். இத்தகைய பணி சிரமங்களுக்கு இடையே போக்குவரத்து காவல்துறையினர் செய்யும் நற்செயல்கள் பாராட்டுதலுக்குரியது அல்லது போற்றுதலுக்கு உரியது என்றே சொல்லலாம்.
சென்னை ராயபுரம் எம் சி ரோட்டில் போக்குவரத்து போலீஸ் உதவி ஆணையர் திரு.ராஜகோபால் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு.கோதண்டம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.ராமலிங்கம், திரு.சிவா ஆகியோர் 25 பெண்கள் உட்பட 50 அவர்களுக்கு உணவு, புடவை, லுங்கிகள், மற்றும் தினசரி உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்கள். பண்டிகை தினத்தன்று பொங்கல், புத்தாடை கொடுத்து, ஆதரவற்றவர்களை மகிழ்வித்த காவலர்களின் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
வாழ்க காவலர்கள் ! வளர்க காவல்துறை !
