செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் கார்த்திக். சென்னையில் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார் இவரது ஐந்து வயது மகள் கவிஷ்கா ..
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டுக்கு குடி வந்த நந்தம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் செந்தில்குமாருக்கு கார்த்தி மகள் கவிஷ்கா செல்லப் பெண் ஆனார்.
சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சோதித்தபோது அவருக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும், அதற்கு 5 லட்ச ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்..
கொரோனா லாக்டவுன் காலகட்டம் என்பதால் சிறுமியின் தந்தையான கார்த்தியின் பொருளாதார நிலை இன்னும் மோசமான நிலைமையை சந்தித்தது. அதனால் மகளுக்கு எப்படி அறுவை சிகிச்சை செய்வது என்று தெரியாமல் தவித்தார்..
விஷயத்தை மெதுவாக கேள்விப்பட்டதும் அதிர்ந்து போனார் பக்கத்து வீட்டு தலைமை காவலர் ஆன செந்தில் குமார். உடனடியாக தன்னால் முடிந்த அளவுக்கு 30 ஆயிரம் ரூபாயை புரட்டி கார்த்திக்கிடம் கொடுத்து அறுவை அறுவை சிகிச்சைக்கு செல்லும்படியும் முடிந்தவரை பணத்தை திரட்டி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இதன்பின் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமி கவிஷ்கா நிலைமை பற்றி காவல் ஆய்வாளர் தங்கராஜ் இடம் விஷயத்தைச் சொல்கிறார். உடனே காவல் நிலையத்தை சேர்ந்த அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்கு பணம் கொடுக்கின்றனர் 45 ஆயிரம் ரூபாய் தேறுகிறது..
அத்துடன் சிறுமி கவிஷ்காவுக்காக மீதி பணத்தையும் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து நிதியாக திரட்டி மருத்துவமனைக்கு கொடுத்துள்ளனர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தினர்..
அவர்கள் நீட்டிய உதவி கரத்தின் மூலம் சிறுமிக்கு மருத்துவமனையில் மிகவும் சிக்கலான இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து கடந்த சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார்..
பாராட்டப்பட வேண்டிய காவலர்களின் மனிதாபிமானம்..