திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் COVID -19 வைரஸ் பரவுதலைத் தடுக்கும் நடவடிக்கையில் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்துதல், பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்குதல், காவல் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் காவல்துறை அலுவலகங்களில் தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளித்தல், காவல் நிலையங்களுக்கு வரும் புகார் மனுக்களை சம்பவ இடத்திலேயே சென்று விசாரித்து நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை செய்ய வலியுறுத்தி வருகிறார்கள். இப்பணிகளில் திருப்பூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளும், காவல் ஆளினர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக 14.10.2020 ஆம் தேதி, மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக பணிபுரிந்து வரும் அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய உட்கோட்டங்களிலும், சிறப்பு பிரிவுகள், மற்றும் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களான காவல்துறை அதிகாரிகள், மற்றும் காவல் ஆளினர்கள் 1484 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மாத்திரைகளை வழங்கினார்கள்.