சென்னை : சென்னை ஆவடி மாநகர காவல் ஆணையர், அலுவலக எல்லைகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை புகார் தொடர்பாக ஆவடி காவல் ஆணையர் திரு.சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், காவல்துறையினர் , தொடர் நடவடிக்கைகள் எடுத்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வாகனங்களில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்வு நேற்று காலை ஆவடி மாநகர காவல் ஆணையர், அலுவலக வளாகத்தின் எதிரே சி.டி.எச் சாலையில் நடைபெற்றது.
இதில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சாலைகளில் வந்த ஆட்டோ, கார், பஸ், இருசக்கர வாகனங்களை நிறுத்தி அவைகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவருடன் ஆவடி காவல் துணை ஆணையர் திரு.மகேஷ், ஆவடி காவல் உதவி ஆணையர் திரு.புருஷோத்தமன், பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் திரு.முத்துவேல்பாண்டி, மற்றும் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.