கடலூர்: புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவர் அமைச்சர் கந்தசாமியின் உதவியாளராக இருந்தார். கடந்த 5-ந்தேதி ரெட்டிச்சாவடி அருகே வீரப்பன் மோட்டார் சைக்கிளில் வந்த போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது.
இது பற்றி ரெட்டிச்சாவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்பரசன், சூர்யா உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அன்பரசன், சூர்யா ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் கைதான பாகூர் கிருமாம்பாக்கம் இந்திராநகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் புகழ் என்கிற புகழேந்தி (22) என்பவரும் ரெட்டிச்சாவடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவர் மீது கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் புகழேந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த புகழேந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர் திரு.குமாரபாலன், புகழேந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினார்.