சென்னை : ‘பண மோசடி செய்யும் நோக்கில் வரும், ‘இ – மெயில்’ மற்றும் கடிதங்களை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம்’ என, வருமான வரித் துறை கூறியுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு, பண மோசடி செய்யும் நோக்கில், அங்கீகரிக்கப்படாத இ -மெயில் முகவரி வாயிலாக, தவறான கடிதங்கள் அனுப்பி, மக்களை ஏமாற்ற சிலர் முயற்சி செய்கின்றனர்.
இது, வருமான வரித் துறை கவனத்திற்கு வந்துள்ளது. இதேபோல தொலைபேசி அழைப்புகளும் வருவதாக தெரிகிறது.
எனவே, தங்களின் கணக்கிலிருந்து ஏதாவது தொகையோ, வரியோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது குறித்து, இ – மெயில், தொலைபேசி அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது குறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையின் www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் உள்ள, வருமான வரித் துறை இ – மெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளவும்.வருமான வரித் துறையின் அதிகாரபூர்வ கடித பரிமாற்றம் அனைத்தும், ‘DIN’ எனும் ஆவண அடையாள எண்ணை கொண்டிருக்கும். இது, அதிகாரபூர்வ இ — மெயில் முகவரி வாயிலாக மட்டுமே அனுப்பப்படும்.எனவே, மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.