கடலூர்: கடலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சரவணன், உதவி-ஆய்வாளர் திரு.சந்துரு மற்றும் காவல்துறையினர் கடந்த 11-ந்தேதி கடலூர்-புதுச்சேரி சாலையில் உள்ள பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு சுமார் ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்த விழுப்புரம் மாவட்டம் வானூரைச்சேர்ந்த சுப்பிரமணி மனைவி காஞ்சனா(46) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை கடலூர் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து அவர் வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதே கடத்தல் தொழிலில் காஞ்சனா அடிக்கடி ஈடுபட்டு வந்ததால், அவரை கள்ளச்சந்தைக்காரர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார். அதன்படி காஞ்சனாவை தடுப்பு காவல் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
ரேஷன் அரிசியை வெளிச்சந்தையில் விலைக்கு வாங்குவதும், விற்பதும், பதுக்கி வைப்பதும் சட்டத்துக்கு புறம்பானது என்பதால் ரேஷன் பொருட்களை கடத்துவது, பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பது சம்பந்தமாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரை 94981 02508 என்ற கைபேசி எண்ணிலோ அல்லது இன்ஸ்பெக்டரை 94452 85420 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்று ஆய்வாளர் திரு.சரவணன் தெரிவித்து உள்ளார்.