திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N.சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின்பேரில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் பயனாக, நிகழாண்டில் இதுவரை நீதிமன்றத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட 2,893 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிமன்ற விசாரணை வேகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய, அம்பாசமுத்திரம் பிரம்மதேசத்தை சேர்ந்த மாயபெருமாள்(60). கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்தாார். அதன்பின், 9 ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அவரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதே போல 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, திருட்டு வழக்கில் தொடர்புடைய ராதாபுரத்தை சேர்ந்த அந்தோணி சுரேஷ்(52). கர்நாடகத்தில் பதுங்கியிருந்த கொலை வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்(40). மோசடி வழக்கில் தொடர்புடைய தாமஸ்(64). மகராஷ்டிரத்தில் தலைமறைவாக இருந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய பொன்ராஜ்(26). விபத்து வழக்கில் தொடர்புடைய சஞ்சய் கிருஷ்ணா சேத்துவால்(54). உள்பட பிறமாநிலங்களில் பதுங்கியிருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறாக மொத்தம் 2,893 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், பிடியாணை நிலுவையில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காண நவீன தொழில்நுட்ப உதவியுடன் காவல்துறையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















