திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் இதுவரை போக்சோ வழக்குகளில் ஒரு தூக்கு தண்டனை உள்பட 29 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முற்றிலும் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், போக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி, அது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் அனைத்தையும் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாக கண்காணித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் விதமாக அனைத்து சட்டபூா்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 28 போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 29 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஒரு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு 25 ஆண்டுகள் மற்றும் 4 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழாண்டில் போக்ஸோ வழக்குகளில் தொடா்புடைய 26 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















