திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அழகிய லைட் ஹவுஸ் கடற்கரை உள்ளது. காட்டுப்பள்ளி முதல் பழவேற்காடு முகத்துவாரம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிக நீளமான அதிக ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையாக இது உள்ளது. பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் மட்டும் குப்பை குளங்கள் அதிகமாக காணப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மது பாட்டில்கள் உள்ளிட்ட ஏராளமான குப்பைகள் தினசரி சேர்வதால் கடற்கரை தூய்மை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடற்கரையில் இனப்பெருக்கம் செய்ய வரும் கடல் ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் இனப்பெருக்கத்திற்கான தடையும் ஏற்பட்டுள்ளது.
பழவேற்காடு பறவைகள் சரணாலயம் மற்றும் வனத்துறை,பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் அவ்வப்போது பீச் கிளீனிங் எனும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி வனத்துறை உள்ளிட்ட சமூக அமைப்புகள் இணைந்து பழவேற்காடு கடற்கரையில் தூய்மை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வளர்கள் மாணவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி கடற்கரையில் வாழும் கடல் ஆமைகள் மற்றும் பறவைகள் வாழும் இடத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் வனத்துறை, தமிழ்நாடு கடலோர காவல் படை, பிஸ்லரி பாட்டில் ஃபார் சேஞ்ச்,சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ஷீகோஎஃப் ஆர் பவுண்டேசன், சிபிஆர்டி டிரஸ்ட் மற்றும் பழவேற்காடு மக்கள் செயல்பாட்டு கூட்டமைப்பு இணைந்து இப்பணியை மேற்கொண்டனர். சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை பிஸ்லரி பாட்டில் நிறுவனம் எடுத்துச் சென்று மறு சுழற்சி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளனர். இதில் வன சரகர் பிரபாகரன், வனவர் செந்தில்குமார், பிஸ்லரி நிறுவன ஆர்த்தி, பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்ந்த சமூக ஆர்வலர்கள் ஹாஜாமொய்தீன், துரை மகேந்திரன், எத்திராஜ், வைரவன் குப்பம் ஞானமூர்த்தி, திலகவதனா, ரேகா, சரஸ்வதி மலரும் மாற்றுத் திறனாளிகள் நிர்வாகிகள் ஷெரிப், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















