மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்ட சைபர்கிரைம் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் பேரிலும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட குற்றச்சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டு 2025-ம் ஆண்டு ஆன்லைன் மூலமாக Crypto Currency ல் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி மதுரை மாவட்டம் திருவேடகத்தை சேர்ந்த நபர் ஒருவரை ஏமாற்றி ரூ.11,52,350/- பணத்தை ஆன்லைன் பணமோசடி மூலம் பெற்று ஏமாற்றிய வழக்கில் ஈடுபட்ட திருப்பூரைச் சேர்ந்த ஹரிகரன் த/பெ. சேகர், சங்கர் த/பெ. சண்முகவடிவேல் மற்றும் பரசுராம் த/பெ. ரவி ஆகியோரை திருப்பூரில் வைத்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் பேங்க் பாஸ்புக்குகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்படி குற்றவாளிகளை விசாரணை செய்ததில் கமிஷன் பணத்திற்காக குற்றவாளிகள் அவர்களுடைய வங்கி கணக்குகளை சைபர்குற்றவாளிகளுக்கு கொடுத்து அவர்கள் ஆன்லைன் பணமோசடி செய்து பொதுமக்களிடமிருந்து பணத்தை பெறுவதற்கு உதவியாக இருந்ததும் அதற்கு லட்ச கணக்கில் கமிஷன் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இக்குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கமிஷன் பணத்திற்காக சிம்கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவற்றை தரும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்