திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றவழக்குகளில் ஜாமீன் பெற்று, பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவுப்படி 2,776 குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மானூர் பகுதியில் 2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய ஆலங்குளம், நெட்டுரை சேர்ந்த ராஜா எனும் சண்முகநாதன் (29). கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் குஜராத்தில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர். இவ்வாறு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களிலும் தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்