திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சங்கனாபுரம் பொட்டல்புதூரைச் சேர்ந்த கைலாசம் மகன் சக்தி மாரியப்பன்(41). அரசு விரைவு பேருந்து ஓட்டுனராக பணி புரியும் இவர் சம்பவத்தன்று தனது மகனை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தனியே நிற்கவிட்டுவிட்டு, மது அருந்த சென்றுள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த மேலப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், முருகேஷ்பாண்டியன், பாதுகாப்பு கருதி அச்சிறுவனை புறக்காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சக்திமாரியப்பன், தன் மகனை எப்படி இங்கே உட்கார வைக்கலாம் என முருகேஷ்பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்தல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சக்திமாரியப்பனை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















