மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல்லை கொள்முதல் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சந்தைப்பட்டியில் தமிழ்நாடு அரசு நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், அந்த நெல்கொள்முதல் நிலையத்தில் அரசு நிர்ணயம் செய்து 3500 மூட்டைகளை மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு மீதி உள்ள 30,000 மூட்டைகளை வாங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,நெல்லை அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்துள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி பேரையூர் மெயின் ரோட்டில் அயோத்திபட்டி விலக்கில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த சேடப்பட்டி காவல் நிலைய எஸ்.ஐ. கருப்பையா தலைமையிலான போலீசார்
மறியலில் ஈடுபட்ட விவசாயகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், பேரையூர் மெயின் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி