மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 150 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குண்டுக் கட்டாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நாட்டார்மங்கலம், அய்யம்பட்டி, சக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் 500க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல்யை கொள்முதல் செய்ய கிராம மக்கள் சார்பிலேயே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கொள்முதல் நிலையம் அமைத்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்த ஆண்டு இந்த கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 தினங்களாக கொள்முதல் செய்த அதிகாரிகள், திடீரென கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்துவிட்டு, அருகிலேயே அய்யம்பட்டியில் தனிநபருக்கு கொள்முதல் நிலைய ஒப்பந்தம் வழங்கி அந்த கொள்முதல் நிலையத்தில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தாக கூறப்படுகிறது.
கிராம மக்கள் இணைந்து நடத்திய கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தி வைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில், இருந்த உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சாலை மறியிலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 150 க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். தொடர்ந்து, உசிலம்பட்டி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் பொதுமக்கள் இணைந்து நடத்தப்பட்டு வரும் கொள்முதல் நிலையத்தில் வழக்கம் போல நெல் கொள்முதல் பணிகள் தடையின்றி நடத்த வேண்டும் என அனைத்து கிராம மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி