திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கீழ்கண்டவாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகி வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருட்களை வாங்க பொது மக்கள் விருப்பம் காட்டுகின்றனர். ஆனால் அதில் நடக்கும் மோசடிகளை மறந்துவிடுகின்றனர். இணைய வழி குற்றத்தை தடுக்க காவல் துறையினர் தொடர்ச்சியான அறிவுரை விடுத்தும் மீண்டும் போலியான ஆன்லைன் மோசடி விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்து வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சில மோசடி பேர்வழிகள் பிரபலமான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான சமூகவலைத்தளங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
எனவே பொதுமக்கள் இணையத்தில் எந்த பொருளை வாங்கும் முன்பும் அதனுடைய உண்மை தன்மையையும் அதை விற்பவருடைய முழு விபரங்களையும் நன்கு சோதித்து பார்த்தபின் வாங்க வேண்டும் என்றும் , இணைய வழி விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N . சிலம்பரசன், இ.கா.ப., கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1930 மற்றும் மின்னஞ்சல்: www.cybercrime.gov.in மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்