திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதை உண்மையென நம்பிய அவர், சிறிய தொகையை முதலீடு செய்துள்ளார். இந்நிலையில், அவரை மர்ம நபர்கள் சிலர் தொடர்புகொண்டு அதிக தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதன்படி அவரும், அதே பகுதியைச் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து ரூ.20,17,000-ஐ அந்த நபர்கள் கூறிய வங்கிக்கணக்கிற்கு பல தவணைகளாக அனுப்பியுள்ளனர்.
ஆனால், முதலீடு செய்த பணத்துக்கு லாபத்தையோ, அசல் தொகையையோ பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து, இணையவழியில் பண மோசடி செய்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















