அரியலூர்: முதல் மூன்று மனைவிகளுக்கும் குழந்தை இல்லை என்பதால் நான்காவதாக கள்ளக்காதலியின் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட பஸ் கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த சிறுமிக்கு 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரிய கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அரசு போக்குவரத்துக்கழக ஜெயங்கொண்டம் பணிமனையில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியிருக்கிறது. மூன்று மனைவிகளுக்கும் குழந்தை இல்லை என்பதால் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று அது குறித்து அவரும், அவரது தாய் ருக்மணியும் தீவிரமாக இருந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் கள்ள உறவும் ஏற்பட்டிருக்கிறது ராதாகிருஷ்ணனுக்கு. அப்போது அவரது 13 வயது மகளை திருமணம் செய்து கொள்வதாக ராதாகிருஷ்ணன் சொல்ல, பரமேஸ்வரியும் அதற்கு சம்மதித்து கடந்த ஆறாம் தேதி பெரிய கருக்கை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து ராதாகிருஷ்ணனுக்கு தனது 13 வயது மகளை திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
இந்த திருமணத்தில் ராதாகிருஷ்ணன் தாய் ருக்மணியும் இருந்திருக்கிறார். திருமணம் நடந்த அன்றே முதலிரவு நடந்து இருக்கிறது. சிறுமி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் கட்டாய படுத்தி அவரிடம் உறவு வைத்திருக்கிறார். இதில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தகவல் கொடுக்க, அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் ராதாகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றார்கள் போலீஸ். தன் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதை அறிந்ததும் ருக்மணி தலைமறைவாக இருந்து வருகிறார்.