திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் விசாரணைக் கைதிகள் என சுமார் 1,400-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். மத்திய சிறைக்கு சட்ட விரோத பொருட்கள் ஏதேனும் கொண்டு வரப்படுகிறதா என்பதை காவல்துறையினர் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 07.06.2025 அன்று காலை காவல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் 12-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் , பாளையங்கோட்டை மத்திய சிறையில் போதை வஸ்துகள், கைப்பேசி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியும் நோக்கில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அனைத்து கைதிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உணவு தயாரிக்கும் இடம், கைதிகளின் அறைகள் உள்பட சிறை வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இச்சோதனையில் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் ஏதும் சிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்