தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தடியில், நேற்று கார் ஒன்று கேட்பாரற்று நின்று இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக குட்கா இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் காவல் ஆய்வாளர் திரு.வெங்கட்ராமன், மற்றும் காவல்துறையினர், விரைந்து சென்று மூட்டைகளை சோதனை செய்தனர். குட்கா பறிமுதல் அதில் 750 கிலோ தடை செய்யப்பட்ட குட்காவை பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. மேலும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் மற்றும் குட்கா கடத்தியவர் குறித்து காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.